2022 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகில் உள்ள ஏனாதி கிராமத்தில் 18 தங்க நாணயங்கள் புதையலாக கிடைத்தன. ஒரே பரபரப்பு.
தமிழ்நாட்டில் இஸ்லாத்தின் தொண்மைக்கு இதோ அறுதியான சான்று கிடைத்து விட்டது, அரேபிய முஸ்லீம் வணிகர்கள் இப்பகுதியில் வணிகம் செய்தனர், இங்கு இஸ்லாம் பரவியிருந்து.. இப்படி இன்னும் பல .
இந்த நணயங்கள் குறித்து வரலாற்று செய்திகள் சில .
1) 2000 ஜுன் மாதத்தில் சிவகங்கை மாவட்டம் இளந்தகரையில் ஒரு தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது .
இப்படித்தான் சமூக வளைதளங்களில் ஆளுக்கொரு பதிவு. இந்த நாணயம் குறித்த செய்திகள் கிடைத்தவுடன் சென்னை பல்கலைக் கழக அரபுத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஜாஹிர் ஹூஸைன் அவர்களிடம் தொடர்பு கொண்டு சில செய்திகளை உறுதி செய்து கொண்டேன்.
2, தற்பொது ஏனாதியில் கிடைத்திருப்பதும் இதே வகை காசுகள்தான். ஏனாதி இளந்தக்கரை ஊர்கள சற்று அருகருகில் உள்ள ஊர்கள்தாம். ஏனாதி தொன்மை வரலாற்றுச் சான்றுகள் கொண்ட இடமாகும்.
3, ஏனாதியில் நாணயங்கள் கிடைத்த உடன் இது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் என்னிடமும் தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர். வரலாற்று தகவல்கள் சொன்னேன். அரசு தப்புக்கு ஓகே. சமூக வளைதலக்காரர்கள், ஊடகவியளாளர்கள் ஆகியோர் பல ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து நமது தமிழ் முஸ்லிம் தின்னையிலும் நிறைய பதிவுகள். சில நண்பர்கள் நான் இது குறித்து எழுத வேண்டும் எனவும் பதிவிட்டனர். ஆகவே இந்த பதிவு.
4, ஏனாதியில் கிடைத்த தங்க நாணயங்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இன்றைய சிரியா தலைநகரான டமாஸ்கஸ் நகரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த உமையா கலீஃபாக்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜிரி முதல் நூற்றாண்டில் வெளியிடப்பட்டதாகும். நாணயத்திற்கு தினார் என்று பெயர்.
5, ஏனாதியில் கிடைத்த 16 நாணயங்களில் மிகத் தெளிவாக உள்ள நாணயங்கள் ஓரிரண்டு மட்டுமே. மற்றவை குறுக்காக வெட்டப்பட்டும் துளைகளிடப்பட்டும் சிதைக்கப்பட்டும் காணப்படுகின்றன.
இந்த நாணயத்தின் முன்பக்கம் நடுப் பகுதியில்
லா இலாஹா இல்லல்லாஹு வஹதஹீ லாசரிக லஹு
(அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஒருவனே, அவனுக்கு இணையில்லை என தொன்மையான அரபி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
இதே பக்கத்தில் நாணயத்தின் ஒரு பகுதி முழுவதும் வட்டமாக, முஹம்மதுர் ரசூல்லாஹ் அர்ஸலஹு பில்… தீணி குல்லு ஹி பில் முஹம்மத்.. (அல்லாஹ்வின தூதர் அவன் அவரை நேரான வழி மற்றும் சத்திய மார்கத்தை கொண்டு அனுப்பி வைத்தான், எல்லா மார்க்கங்களையும் வென்று வரும்படி செய்தான்) என்று பொறிக்கப்பட்டுள்ளது
மேற்படி நாணயத்தின் மறுபக்கம் நடுப் பகுதியில், அல்லாஹு அஹத் அல்லாஹ் சமத் லம் எலித் வலம் யூலத் (இறைவன் ஒருவனே, அவன் எந்த தேவையும் அற்றவன், எவரையும் பெறவும் யில்லை எவராலும் பெறப்படவும் யில்லை) என முன் பக்கம் போன்றே அரபியில் பொறிக்கப்பட்டுள்ளது
இந்த பக்கத்தின் ஓரத்தில் வட்டமாக பிஸ்மில்லாஹ் முறிய ஹாதத் தீனார் பீ ஸனத்தி வளமானின் ( இறைவன் பெயரால் இந்த தீனார் ஹிஜிரி என்பத்தி ஏழாம் ஆண்டு அச்சிடப்பட்டது) என முன்சொன்ன பாணியிலேயே அரபியில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயங்கள் பல இடங்களில் கிடைத்துள்ள உமையாக்கள் காலத்து நாணயங்களை பெரிதும் ஒத்துள்ளன. ஆகவே இவை உமையாக்கள் ஆட்சி கால (7ம் நூற்றாண்டு) நாணயங்களாகும்.
சரி வரலாறு சொல்வதென்ன?
6) பெருமானார் நபிகள் மூலமாக இஸ்லாம் அருளப்பட்ட கி.பி ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பே, சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, அரேபிய நாடுகளுக்கும் தமிழகத்திற்க்கும் வணிகத் தொடர்பு இருந்ததை சங்ககால தமிழ் இலக்கியங்கள் சொல்லுகின்றன.
குதிரைகள், பொண்மணிகளை ஏற்றி வந்து இங்கிருந்து மிளகு போன்ற வாசனை பொருட்களை ஏற்றிச் சென்றதை இப்பாடல்கள் தெரிவிக்கின்றன.
இத் தொடர்பின் தொடர்ச்சியாக கிபி 7 ஆம் நூற்றாண்டிலிருந்து இங்கு வந்த அரேபியர் முஸ்லீம்களாக வந்து இங்கேயே தங்கி, சிலர் நமது நாட்டு பெண்களை திருமணம் செய்து கொன்டதன் வாயிலாக தமிழக இஸ்லாமிய சமுதாயம் தொடக்கம் கண்டு காலப் போக்கில் நமது நாட்டு மக்கள் கூட்டமாக இஸ்லாமிய மதத்தை தழுவியதால் இங்கு இஸ்லாமிய குடியிருப்புகள் தோன்றலானது என்பதும் திருச்சிராப்பள்ளி உறையூரில் ஹிஜிரி 116 ஓர் பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்தது என்பதும் வரலாறு.
ஆகவே ஹிஜிரி இரண்டாவது நூற்றாண்டிலேயே இஸ்லாம் தமிழகத்தில் வேறூன்றத் தொடங்கி விட்டது என்பதும் வரலாறு.
8) மலபார் எனும் மேற்கு கடற்கரை துறைமுகங்களுக்கும் தமிழ் நாட்டு கிழக்கு கடற்கரை துறை முகங்களுக்கும் இடையே தரைவழிப் போக்கு வரத்து இருந்து வந்தது. இந்த பெரு வழி புதுக்கோட்டை வழியாகவே சென்றது. மேலும் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்த வணிகர்கள் புதுக்கோட்டை பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆகவே அவர்களுக்கு அரேபிய வணிகர்களுடனான வணிகத் தொடர்பு இருந்திருக்கக் கூடும்.
அப்பொழுது எல்லாம் வணிகம் பண்டமாற்று முறையிலேயே நடைபெற்றது. எனவே இது போன்ற தங்க நாணயங்கள் பண்டமாற்றாக பெறப்பட்டிருக்கலாம். புதுக்கோட்டை பகுதி வணிகர்கள் கிபி முதல் இரண்டாம் நூற்றாண்டில் ரோம நாட்டு வணிகர்களுடன வணிகத் தொடர்ப்பு கொண்டிருந்தனர். இதற்கு சான்றாக புதுக்கோட்டை ஆலங்குடிக்கு அருகில் உள்ள கருக்காகுறிச்சியில் 200 ரோம பொன் நாணயங்கள் புதையலாக கிடைத்துள்ளது என்பதும் கூடுதல் செய்தி.
9) இலந்தக் கரை மற்றும் ஏனாதியில் கிடைத்த நாணயங்கள் செலவாணியில் திரும்பப் பெறப்பட்டவை. அக்காலத்தில் நாணயங்கள் திரும்பப் பெறப்படும் பொழுது அவை குறுக்காக வெட்டப்படும் துளையிடப்படும் உரு சிதைக்கப்படும் தங்கத்தின் மதிப்பிற்காக இருப்பில் வைக்கப்படும். தங்கம் என்றும் தங்கம்தான். அதன் மதிப்பு என்றும் குறைவதில்லை. இப்படிப்பட்ட நாணயங்கள் தங்கத்தின் மதிப்பிற்காக பண்டமாற்றுப் பொருளாக பரிவர்த்தனையில் இருந்தது என்பது நாணயவில் வரலாறு.
10) எனவே இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்ன வென்றால் இது போன்ற பரிவர்த்தனைக்கு அரேபிய முஸ்லிம் வணிகர்களோ அல்லது இவ்விடயத்தில் முஸ்லீம்கள்தான் முற்றிலும் காரணம் என்று சொல்லி விடுவதற்கில்லை.
11) அரேபிய – தமிழக பண்டைய வணிகம் ஹிஜிரி தொடக்க ஆண்டுகளில் தமிழகத்தில் இஸ்லாத்தின் பரவல் காணத்தக்கது. (தொடக்க காலத்தில் இஸ்லாம் மதப் பரவல் மிகவும் சீராகயிருந்தது) இங்கு இஸ்லாம் மதத்தை தழுவியவர்களின் வரலாறு, அவர்களது வணிகம் என ஒவ்வொன்றும் அதனதன் சான்று அடிப்படையில் தனித் தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டியவையாகும். நாணயங்களை கொண்டு மட்டுமே ஒரு முடிவுக்கு வர இயலாது. இஸ்லாம் இங்கு வாள் கொண்டு பரப்பபடவில்லை ஏனெனில் இங்கு அப்பொழுது முஸ்லிம் மன்னர்கள் யாரும் ஆட்சி செய்யவில்லை.
12) அரேபிய நாணயங்கள் கிடைத்த இடங்களில் அதன் மதிப்பு பண்டமாற்று வணிகம் கொண்டு நடைப் பெற்றிருக்க கூடும். இங்கெல்லாம் அரேபிய முஸ்லீம்கள் வந்தார்களா, நமது நாட்டு முஸ்லீம் வணிகர்கள் அங்கு இருந்தார்களா அல்லது இவ்வூர்களில் இஸ்லாம் பரவியிருந்ததா என்பது போன்ற வரலாறு, அசல் / முதல் நிலை வழக்காறு சான்றுகள் கொண்டு நிலைநிறுத்தப்பட வேண்டும்.
எவ்வாராயினும் பொதுவாக 2000 ஆண்டுகளுக்கு முன்பே அரேபிய தமிழக வணிகத் தொடர்புகள் இருந்தன என்பதும் ஹிஜிரி தொடக்க ஆண்டுகளிலேயே இங்கு இஸ்லாம் வந்து விட்டது என்பதும் வரலாறு காட்டும் உண்மை. இந்த நாணயங்களும் வணிகத் தொடர்பிற்கான ஒர் துணைச் சான்றாகும் எனவும் கொள்ளலாம்.
டாக்டர் ஜெ ராஜா முஹம்மத், வரலாற்று ஆய்வாளர்
இயக்குனர், இஸ்லாமிய தமிழ் பண்பாட்டு ஆய்வு மய்யம், ஜமால் முஹம்மத் கல்லூரி – திருச்சி
